உள்ளூர் செய்திகள்

அரசுக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்டப்படுவதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

Published On 2024-11-29 15:14 IST   |   Update On 2024-11-29 15:14:00 IST
  • மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையிட்டபோது அவர் உரிய நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டார்.
  • வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், நீதிபதி மரிய கிளாட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

மதுரை:

திருச்சியை சேர்ந்த முருகேசன் ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஈரோட்டை சேர்ந்த தனியார் ஒப்பந்ததாரர் ஒருவரால் மிகப்பெரிய ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. கோவில் கட்டப்பட்டு வரும் இடம் அரசுக்கு சொந்தமான இடம். மேலும் கட்டுமான பொருட்கள் அனைத்தையும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே வைத்து உள்ளனர். இங்கு கட்டுமான பணியில் ஈடுபடும் ஊழியர்களும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலேயே தங்கி உள்ளனர்.

இவ்வாறு அரசுக்கு சொந்தமான நிலத்தில் கோவில் கட்டுவதற்கும், பணியாளர்கள் அங்கே தங்குவதற்கும் எந்த அனுமதியும் அரசு வழங்கவில்லை. இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையிட்டபோது அவர் உரிய நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டார். மேலும் தனியார் ஒப்பந்ததாரருடன் இணைந்து செயல்படுகிறார்.

அரசுக்கு சொந்தமான நிலத்தில் எந்தவித வகை மாற்றமும் செய்யாமல் சட்டவிரோதமாக தனியார் ஒப்பந்ததாரருடன் மாவட்ட வருவாய் அதிகாரி இணைந்து இதுபோன்ற கட்டுமானங்களை கட்டி வருகிறார். இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டு வரும் கட்டுமானத்தை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், நீதிபதி மரிய கிளாட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் உள்ளேயே அரசு நிலத்தில் உரிய அனுமதி இல்லாமல் ஆஞ்சநேயர் கோவில் கட்டப்படுவதற்கான புகைப்படங்களையும் ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.

இதனை பதிவு செய்த நீதிபதிகள் மனுதாரர் புகார் குறித்து உள்துறை செயலர் மற்றும் திருச்சி மாவட்ட கலெக்டர் பரிசீலனை செய்து உரிய முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

Similar News