பிச்சை எடுத்த பணத்தை சேலம் கலெக்டரிடம் வழங்கிய முதியவர்
- பூல்பாண்டி (வயது 72). பிச்சைக்காரரான இவர், கடந்த 1980-ம் ஆண்டு குடும்பத்துடன் மும்பையில் குடியேறினார்.
- பிச்சை பெற்ற பணத்தில் பள்ளிகளுக்கு உதவுவது போன்ற சமூக தொண்டாற்றி வந்தார்.
சேலம்:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம், ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டி (வயது 72). பிச்சைக்காரரான இவர், கடந்த 1980-ம் ஆண்டு குடும்பத்துடன் மும்பையில் குடியேறினார். அங்கு சலவை தொழில் செய்து கொண்டே யாசகம் பெற்று குடும்பத்தை நடத்தி வந்தார்.
இந்நிலையில் அவரது மனைவி சரஸ்வதி 24 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டனர். தனது 3 பிள்ளைகளை கரை சேர்த்த பூல்பாண்டி, முழு நேர பிச்சைக்காரர் ஆனார். மும்பையில் மரக்கன்று நடுவது, பிச்சை பெற்ற பணத்தில் பள்ளிகளுக்கு உதவுவது போன்ற சமூக தொண்டாற்றி வந்தார். மேலும் தான் பிச்சை பெற்ற பணத்தை கொரோனா நிதி, இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதி, முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறார்.
இந்நிலையில் தான் பிச்சை பெற்றதன் மூலம் கிடைத்த ரூ.10 ஆயிரம் பணத்தை முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதற்காக சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தார். பிச்சை எடுப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை, நான் முழுவதும் வைத்துக் கொள்வதில்லை. ஓரளவு பணம் சேர்ந்ததும் அதை முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவேன். மேலும் பள்ளிகளுக்கும் நன்கொடை வழங்கி வருகிறேன். தற்போது எனக்காகவும், சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும், என்பதற்காகவும் பிச்சை பெற்று அதை நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறேன் என்றார்.
பின்னர் தான் கொண்டு வந்த பணத்தை முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பும்படி சேலம் கலெக்டர் கார்மேகத்திடம் வழங்கினார்.