உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி அழகு நிலையம் கடை உரிமையாளர் சாவு

Published On 2023-09-19 15:45 IST   |   Update On 2023-09-19 15:45:00 IST
  • மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
  • பாரத்தை பரிசோதித்த டாக்டர்கள் வரும்வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தருமபுரி,  

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள ஜக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதையன். இவருக்கு பாரத் (வயது27), வினோத் (25) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் பாரத் டிப்ளமோ வரை படித்துவிட்டு கிருஷ்ணகிரியில் அழகு நிலையம் கடை நடத்தி வந்தார். வினோத் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பாரத் கிருஷ்ணகிரியில் இருந்து வீட்டிற்கு வந்தார். பின்னர் அவரும்

அதே பகுதியைச் சேர்ந்த வேடியப்பன் (37) என்பவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றனர். அப்போது அவர்கள் கம்பைநல்லூர்-ஜக்குபட்டி ரோட்டில் உள்ள கோணகுட்டை அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாரத்தும், வேடியப்பனும் படுகாயமடைந்தனர்.

உடனே அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பாரத்தை பரிசோதித்த டாக்டர்கள் வரும்வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். வேடியப்பன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News