சேலம் அருகே பலத்த காற்றினால் வாழைகள் சேதம்
சேலம்:
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் சூறைக்காற்றினால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன.
சேலம் அருகே பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இதில் கடந்த வாரம் சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையில் பல்வேறு இடங்களில் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.
பாதிக்கப்பட்ட விவசாயி–களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் பொருட்டு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். மேலும், விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காற்று, மழையினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயிர்கள் தற்காத்துக்கொள்ளும் தொழில்நுட்பங்கள் குறித்தும், தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்களை பெற தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகிப் பயன் பெறுமாறு விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.