விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பல வகையான வாழைப்பழங்கள்.
திண்டுக்கல்லில் வரத்து குறைவால் வாழைப்பழம் விலை உயர்வு
- சுபமுகூர்த்தம் மற்றும் விழாக்காலங்களில் தேவை அதிகமாக இருப்பதால் வாழைப்பழதார்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
- வியாபாரிகளே அதிக விலை கொடுத்து வாங்குவதால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறோம் என்றார்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே நத்தம், ஆத்தூர், தர்மத்துப்பட்டி, சுரைக்காய்பட்டி, மல்லையாபுரம், கன்னிவாடி, எரியோடு குஜிலியம்பாறை மற்றும் கரூர், குளித்தலை, தேனி, சின்னமனூர் ஆகிய பகுதிகளில் ஆண்டு முழுவதும் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு வாழைத்தார் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுபமுகூர்த்தம் மற்றும் விழாக்காலங்களில் தேவை அதிகமாக இருப்பதால் வாழைப்பழதார்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து வாழைப்பழ வியாபாரிகள் சங்கச் செயலாளர் பாண்டி கூறியதாவது:-
வாழைத்தார் வரத்து குறைவானதால் வாழைப்பழங்களின் விலை உயர்ந்துள்ளது. ரூ.300க்கு விற்ற பச்சை வாழைப்பழத்தார் ரூ. 600க்கும், ரூ.300 க்கு விற்ற கற்பூரவள்ளி ரூ.500க்கும், ரூ. 250 க்கு விற்ற நாட்டுப்பழம் ரூ. 450க்கும், ரூ.600 க்கு விற்ற செவ்வாழை ரூ.1100 க்கும், ரூ.400 க்கு விற்ற ரஸ்தாலி ரூ.700க்கும் விற்கப்படுகிறது. சில்லரை விலையில் செவ்வாழை ரூ.12க்கும், பச்சைப்பழம் ரூ.5க்கும், கற்பூரவல்லி, பூவன் ரூ.6 க்கும், ரஸ்தாலி ரூ. 7க்கும், நாட்டுப்பழம் ரூ.5 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.தினசரி தேவையை விட வாழைத்தார்களின் வரத்து குறைவாகவே உள்ளது. அதிக விலை கொடுத்து வாங்குவதால் நாங்களும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறோம் என்றார்.