உள்ளூர் செய்திகள்
மண் குவாரியில் பணம் கேட்டு மிரட்டிய பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் கைது
- எர்ணாகுப்பம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் கோதண்டன் என்பவர் நடத்தி வருகிறார்.
- கோதண்டன் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள வேம்பேடு கிராமத்தில் அரசு அனுமதியுடன் சவுடு மண் குவாரி இயங்கி வருகிறது. இதனை எர்ணாகுப்பம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் கோதண்டன் என்பவர் நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் மண் குவாரிக்கு கீழானூரை சேர்ந்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட பகுஜன்சமாஜ் கட்சியின் தலைவர் பிரேம்குமார் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கோதண்டன் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இன்று அதிகாலை பகுஜன் சமாஜ்கட்சியின் மாவட்ட தலைவர் பிரேம்குமாரை அதிரடியாக கைது செய்தனர். இவரது மனைவி கீழானூர் ஊராட்சி தலைவியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பகுஜன்சமாஜ் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.