உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் குற்றச்சம்பவங்களை தடுக்க போலீஸ் கண்காணிப்பு தேவை

Published On 2023-10-27 13:25 IST   |   Update On 2023-10-27 13:25:00 IST
  • கூட்ட நெரிசலை பயன்படுத்தியும், தனியாக நடந்து செல்லும் பெண்கள், மூதாட்டிகளை குறிவைக்கும் வழிப்பறி சம்பவங்களும் நடந்து வருகின்றன.
  • இதனை தடுக்க போலீசார் தகுந்த முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

திண்டுக்கல்:

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஜவுளி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை வாங்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கடைவீதி, பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. வருகிற 1ம் தேதிக்கு பிறகு மக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும். இதனிடையே கூட்ட நெரிசலை பயன்படுத்தியும், தனியாக நடந்து செல்லும் பெண்கள், மூதாட்டிகளை குறிவைக்கும் வழிப்பறி சம்பவங்களும் நடந்து வருகின்றன. எனவே இதனை தடுக்க போலீசார் தகுந்த முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை பின்தொடர்ந்து வந்த ஒரு மர்ம கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். இதேபோல் கலெக்டர் அலுவலக சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடுத்தடுத்து 2 பேரிடம் வழிப்பறி செய்யப்பட்டது.

பண்டிகை நெருங்கும் சமயங்களில் வேலை முடித்து தாமதமாக வீட்டிற்கு வரும் நபர்கள், வெளியூர் சென்று வரும் நபர்கள் ஆகியோரை குறிவைத்து இதுபோன்ற திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். இதுதவிர புறநகர் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டும் கொள்ளையடிக்க வாய்ப்புள்ளது. பண்டிகை சமயங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவு நகர் பகுதியில் சுற்றி வருவதை பார்க்க முடிகிறது.

குறைந்த அளவு முதலீடு கொண்டு சில பொருட்களை பைக்கில் வைத்து வியாபாரம் செய்வது போல பல்வேறு பகுதிகளில் சுற்றி வருகின்றனர். இவர்களின் இருப்பிடம், பெயர் விவரம் போன்றவற்றை போலீசார் கண்டறிய வேண்டும். வியாபாரிகள் போல சுற்றிக்கொண்டு திருட்டு, வழிப்பறியில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. இதுமட்டுமின்றி பஸ்நிலையம் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் குறைவாகவே உள்ளது. இதனை சரியாக அறிந்து அதுபோன்ற இடங்களில் தங்கள் கைவரிசையை காட்டும் சம்பவமும் நடந்து வருகிறது.

எனவே இதுபோன்ற குற்றச்சம்பவங்களை தடுத்து நிறுத்த போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News