அரியலூரில் வளர்ச்சித் திட்டப்பணிகள் ஆய்வு
- அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் ஆய்வு நடைபெற்றது
- மாவட்ட கலெக்டர்ஆனி மேரி ஸ்வர்ணா ஆய்வு மேற்கொண்டார்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வில் செந்துறை ஒன்றியம், குழுமூர் ஊராட்சியில் விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள சிற்றுண்டிகளை தயார் செய்யும் சமையல் கூடத்தினை பார்வையிட்டு பொருட்களின் தரம் மற்றும் இருப்பு, சமையல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் தளவாட பொருட்கள் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல் குறித்து கேட்டறிந்தார்.குழுமூர் ஊராட்சியில் ரூ.8.67 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கதிரடிக்கும் களம் அமைத்தல், ரூ.16.97 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு, குழுமூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் 100 எண்ணிக்கையிலான புளி, வேம்பு உள்ளிட்ட மரங்கள் நடும் பணிகள், அதனைத் தொடர்ந்து ரூ.216 லட்சம் மதிப்பீட்டில் மணப்பத்தூர் - படைவெட்டிகுடிகாடு வரை 4.6 கி.மீ நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை அமைக்கும் பணி,தொடர்ந்து படைவெட்டிகுடிகாடு மணப்பத்தூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.13.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி மைய கட்டட கட்டுமான பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.18.95 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பள்ளி கட்டட கட்டுமான பணியினையும் பார்வையிட்டு கட்டுமான பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்ததுடன் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ஜாகிர்உசைன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.