உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் தனி ரேஷன் கடை கேட்டு குடும்ப அட்டைகளை ஒப்படைத்த கோடாலி கிராம மக்கள்

Published On 2023-05-24 12:49 IST   |   Update On 2023-05-24 12:49:00 IST
  • ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் கோடாலி கிராம மக்கள் தனி ரேஷன் கடை கேட்டு குடும்ப அட்டைகளை ஒப்படைத்தனர்
  • இது தொடர்பாக அப்பகுதியில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர்

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி கிராமத்தில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரேஷன் கடை பழுதடைந்தது. அதனை இடித்து அகற்றிவிட்டு புதிய ரேஷன் கடை கட்டும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர். ஏற்கனவே இருக்கும் ரேஷன் கடை ஒரு தரப்பினருக்கு உரிய இடத்தில் இருப்பதாகவும் எனவே ஊருக்கு பொதுவான இடத்தில் ரேஷன் கடையை கட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி மற்றொரு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக அப்பகுதியில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனை வலியுறுத்தும் வகையில் நேற்று திடீரென புதிய ரேஷன் கடை அமைத்து தரக்கோரி ரேஷன் கார்டுகளை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்த மக்களுக்கு அரிசி பைகளை வழங்கி பா.ம.க.வினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு மாநில பா.ம.க. துணைத் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். பா.ம.க. மாவட்ட தேர்தல் பணிக்குழு உறுப்பினர் குமணன், உதயநத்தம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராஜ்மோகன், உதயநத்தம் மற்றும் கோடாலி பகுதிகளை சேர்ந்த பா.ம.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது சுமார் 270 குடும்பத்தினருக்கு அரிசி வழங்கப்பட்டது. இதில் பா.ம.க. மாநில துணைத்தலைவர் திருமாவளவன் பேசியது: மிக எளிமையாக தீர்க்கப்பட்டு இருக்க வேண்டிய மக்கள் பிரச்சனை தற்போது போராடி பெற வேண்டிய நிலைக்கு சென்றுள்ளது.ரேஷன் கார்டுகளை ஒப்படைத்த மக்களிடம் இதுவரை அதிகாரிகள் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தவோ, தீர்வு காணவோ முயற்சி செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News