உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் மக்கள் தொடர்பு முகாம் - கண்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

Published On 2022-08-25 09:06 GMT   |   Update On 2022-08-25 09:06 GMT
  • நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வாழ்த்துரை வழங்கி 126 பயனாளிகளுக்கு ரூ.25லட்சத்து84 ஆயிரத்து 847 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
  • முகாமில் 126 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 24 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

அரியலூர் :

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம், இளையபெருமாள்நல்லூர் கிராமத்தில், முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க வருவாய் துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமை வகித்தார். உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம் வரவேற்றார். நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வாழ்த்துரை வழங்கி 126 பயனாளிகளுக்கு ரூ.25லட்சத்து84 ஆயிரத்து 847 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர், அட்மா வேளாண் குழு தலைவர் மணிமாறன், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், ஒன்றிய குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசின் வேளாண்மை துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, தோட்டக்கலை துறை, சமூக பாதுகாப்பு திட்டம் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும், கலந்துகொண்டு திட்ட விளக்க உரை நிகழ்த்தினர்.

முகாமில் முதியோர் ஓய்வூதியம், விதவை உதவித் தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, பட்டா மாற்றம், தோட்டக்கலைத் துறை வேளாண்மை துறை, வேளாண்மை பொறியியல் துறை ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 177 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 126 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 24 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 27 மனுக்கள் விசாரணையில் உள்ளன. சுய உதவி குழுக்களால் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில் இயற்கை வளம் மிகுந்த காய்கறி, பழங்கள், கீரை வகைகள், சத்தான உணவு வகைகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன. இவற்றை மாவட்ட வருவாய் அலுவலர், எம்எல்ஏ ஆகியோர் பார்வையிட்டனர்.

இம்முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் ஜானகிராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன், வேளாண்மை துறை அதிகாரிகள் தோட்டக்கலை துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். முடிவில் வட்டாட்சியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News