சம்பல் செயலியை பதிவிறக்கம் செய்ய ஓய்வூதியர்களுக்கு அறிவுறுத்தல்
- சம்பல் செயலியை பதிவிறக்கம் செய்ய ஓய்வூதியர்களுக்கு அறிவுறுத்தபட்டன
- தேசிய சமூக உதவித் திட்டம் இந்தியாவில் உள்ள முதியோர், விதவை மற்றும் ஊனமுற்றோர் போன்ற ஏழைக் குடும்பங்களுக்கு சமூக உதவிப் பலன்களை வழங்குகிறது
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தேசிய சமூக உதவித் திட்டம் என்பது, இந்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு நலத்திட்டம் ஆகும். இந்த திட்டம் கிராமப்புறங்களிலும், நகரப்புறங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய சமூக உதவித் திட்டம் இந்தியாவில் உள்ள முதியோர், விதவை மற்றும் ஊனமுற்றோர் போன்ற ஏழைக் குடும்பங்களுக்கு சமூக உதவிப் பலன்களை வழங்குகிறது.
'சம்பல்' செயலியானது, தேசிய தகவலியல் மையத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடிமக்கள் ஓய்வூதியம் பெற பதிவு செய்திடவும், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிகள் குறித்தும் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் அறிந்து கொள்ள உதவுகிறது. ஓய்வூதியம் பெறுபவர்களின் பட்டியல், நேரடிப் பயன் பரிமாற்றம் குறித்த விவரம் மற்றும் தங்களுக்கு அருகில் உள்ள வங்கி மற்றும் அஞ்சல் நிலையங்கள் குறித்த விவரங்களை அறிய உதவியாக உள்ளது. எனவே, கூகுள் பிளே ஸ்டோரில், சம்பல் செயலியினை ஓய்வூதியர்கள் தங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.