உள்ளூர் செய்திகள்

சேவை குறைபாடு காரணமாக செல்போன் நிறுவனம் ரூ.20 ஆயிரம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

Published On 2022-08-18 09:41 GMT   |   Update On 2022-08-18 09:41 GMT
  • சேவை குறைபாடு காரணமாக செல்போன் நிறுவனம் ரூ.20 ஆயிரம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • செல்போனை சரி செய்து தரவும் இல்லை.

அரியலூர்:

அரியலூர் மின் நகரில் வசித்து வருபவர் மோகன். இவர் அரியலூரில் உள்ள தனியார் செல்போன் விற்பனை நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.20 ஆயிரம் செலுத்தி புதிய செல்போனை வாங்கியுள்ளார். ஆனால் அந்த செல்போன் வாங்கப்பட்ட ஒரு மாத காலத்துக்குள் 2 முறை பழுது ஏற்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனத்தில் அதனை கொடுத்தபோது 2 முறையும் தற்காலிகமாக பழுதை நீக்கி கொடுத்துள்ளார்கள். மீண்டும் செல்போனின் பழுது ஏற்பட்டதால் புதிய செல்போனை வழங்குமாறு மோகன் கேட்டு உள்ளார். ஆனால் அதனை பெற்றுக்கொண்ட விற்பனையாளர் செல்போனை சரி செய்து தரவும் இல்லை. புதிய போன் வழங்கவும் இல்லை.

இதையடுத்து அரியலூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மோகன் வழக்கு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் மற்றும் உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகியோர் குறைபாடுள்ள செல்போனை விற்பனை செய்த நிறுவனம் மோகனுக்கு புதிய செல்போன் வழங்க வேண்டும். மேலும் நிறுவனத்தின் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக அவருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

Tags:    

Similar News