உள்ளூர் செய்திகள்

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 14 ஆண்டுகள் சிறை

Published On 2023-03-09 04:30 GMT   |   Update On 2023-03-09 04:30 GMT
  • அரியலூர் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
  • ரூ.4 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உடையார்பாளையம் அடுத்த மேலணிக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம் மகன் சுப்பிரமணியன் (வயது 40). கடந்த 2021 ஆம் ஆண்டு இவர், 15 மற்றும் 16 வயதுடைய 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து, சிறுமிகளின் தாய் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர், சுப்பிரமணியனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளித்தது. இதில் குற்றவாளி சுப்பிரமணியனுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.4 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். இதையடுத்து குற்றவாளி சுப்பிரமணியன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ம.ராஜா ஆஜராகினார்.

Tags:    

Similar News