தென்காசி வ.உ.சி. வட்டார நூலக போட்டித்தேர்வு பயிற்சியாளருக்கு பாராட்டு
- பயிற்சியாளர் ராஜகோபாலின் பணி சிறக்க போட்டி தேர்வர்கள் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- நிகழ்ச்சியில் நூலகர்கள், தேர்வர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி:
மாவட்டமைய நூலகமாக தரம் உயர்ந்துள்ள தென்காசி வ.உ.சி. வட்டார நூலகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ச்சியாக ஆங்கில புலமை மற்றும் பொது அறிவு வகுப்புகளை போட்டி தேர்வு மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக நடத்தி வரும் பணி நிறைவு செய்த இ.எஸ்.ஐ. மேலாளர் ராஜகோபால் 203 - வது வகுப்பினை நிறைவு செய்தார். பொது நல எண்ணத்துடன் பட்டதாரிகள் போட்டித்தேர்வை எதிர் கொள்ளும் வகையில் தயார்படுத்தி வரும் பயிற்சியாளர் பணி சிறக்க பொது நூலகத்துறை மற்றும் போட்டி தேர்வர்கள் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளர் சங்கரன், நூலகர்கள் பிரம நாயகம், சுந்தர், பாலசுப்பிர மணியன், நூலக பணியாளர்கள், கூட்டுறவு சிக்கன நாணய சங்க முன்னாள் தலைவர் கருப்பசாமி, தென்காசி மாவட்ட நூலக அலுவலக இளநிலை உதவியாளர் வினோத் மற்றும் போட்டித்தேர்விற்கு பயின்று வரும் தேர்வர்கள் பலர் கலந்து கொண்டு பயிற்சியாளரை பாராட்டினர்.