உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் கார்மேகம் தகவல்

Published On 2022-06-07 10:25 GMT   |   Update On 2022-06-07 10:25 GMT
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடன், மாற்றுத் திறனாளிகளுக்கான கடன் மற்றும் குறைந்த வட்டியில் சுய உதவிக்குழு கடன், விதவைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு குறைந்த வட்டியில் கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற அனைத்து விதமான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்ட விவசாயிகள் தங்களின் ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், நில உடைமை தொடர்பான கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக விஏஓ அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்புகொண்டு கடன் மனு சமர்ப்பித்து, பயிர்க்கடன் மற்றும் இதரக்கடன்கள் பெற்று பயனடையலாம்.

கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தை பெற்று ரூ.110 பங்குத் தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் செலுத்தி, உடன் உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் மனுவை சமர்ப்பித்து, அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம்.

சங்கத்தின் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை சில்லரை விற்பனை மூலம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு சேலம் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், சரக துணைப்பதிவாளர் அலுவலகங்களில் தொடர்புகொண்டு பயன்பெறலாம் என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News