உள்ளூர் செய்திகள்

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளியை படத்தில் காணலாம்.

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயற்சி

Published On 2023-06-12 09:07 GMT   |   Update On 2023-06-12 09:07 GMT
  • தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை கேனை எடுத்து தங்கள் மீது மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
  • சரவணனின் மனைவி சென்றபோது, அங்குள்ள ஒரு சிலர் நீயும் உனது கணவரும் ஊருக்குள் வரக்கூடாது. இதனை மீறி வந்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

கடலூர்:

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்று வரும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர். இன்று காலை மாற்றுத்திறனாளி இளைஞருடன் அவரது குடும்பத்தினர் கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை கேனை எடுத்து தங்கள் மீது மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

அங்கு இருந்த போலீசார் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவர்களிடம் இருந்த கேனை பிடுங்கினர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பண்ருட்டி அடுத்த வீரசிங்கன்குப்பத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது தாய், மனைவி, மாற்றுத்திறனாளி மகன், சிறுவன் உள்பட 5 பேர் வந்திருந்தது தெரிய வந்தது.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக சரவணன் வீட்டையும், காரையும் அடித்து உடைத்து தீ வைத்து கொளுத்தி விட்டனர். மேலும் இந்த ஊருக்குள் வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தும், பல்வேறு கட்ட போராட்டம் நடத்திய பிறகு, சம்பந்தப்பட்ட ராஜ்குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் வீரசிங்ககுப்பத்திற்கு சரவணனின் மனைவி சென்றபோது, அங்குள்ள ஒரு சிலர் நீயும் உனது கணவரும் ஊருக்குள் வரக்கூடாது. இதனை மீறி வந்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து இது தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுக்க போலீசார் அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளி சரவணன், நாங்கள் ஊருக்கு செல்லும் போது மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரி மனு கொடுத்தார். கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மகனுடன் குடும்பத்தினர் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News