உள்ளூர் செய்திகள்

லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு: மின்வாரிய அலுவலகத்துக்கு ரூ.14 ஆயிரம் சில்லரை காசு, தாம்பூலத்துடன் வந்த பா.ம.க.வினர்

Published On 2022-09-29 13:03 GMT   |   Update On 2022-09-29 13:03 GMT
  • பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை
  • தாம்பூலத்தையும், சில்லரை காசையும் வாங்க மறுத்து அதிகாரிகள் வாக்குவாதம் செய்தனர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் அடுத்த தேவநேரி, அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இது பழுதடைந்து உள்ளதால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.

இதையடுத்து பழு தடைந்த டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சம்பந்தப் பட்ட மின்வாரிய அதிகாரியிடம் தெரிவித்தனர்.

ஆனால் டிரான்பார்மரை மாற்றி அமைக்க அதிகாரி ஒருவர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து மாமல்லபுரம் நகர பாட்டாளி மக்கள் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் ரூ.14 ஆயிரத்தை சில்லரை காசுகளாக சேகரித்து மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து ஒத்தவாடை தெருவில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர். அவர்கள் சில்லரை காசுகளுடன் மற்றொரு தட்டில் பூ, பழம் உள்ளிட்ட தாம்பூலத்துடன் மேளதாளத்துடன் வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மின்வாரிய அலுவலகத்தின் நுழைவு வாயில் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரியின் மேஜை என இரண்டு இடங்களில் கொண்டு வந்த சில்லரை காசு மற்றும் தாம்பூலத்தட்டை வைத்தனர். இதனை பார்த்து அலுவலகத்தில் இருந்த மின்வாரிய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாம்பூலத்தையும், சில்லரை காசையும் வாங்க மறுத்து வாக்குவாதம் செய்தனர்.

பின்னர் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க வினர் டிரான்ஸ்பர் மாற்ற முதல் தவணையாக ரூ.14 ஆயிரம் கொடுத்து உள்ளோம், இனியாவது வந்து டிரான்ஸ்பார்மரை மாற்றுங்கள் எனக்கூறி விட்டு அங்கிருந்த மேஜையில் சில்லரை காசை வைத்து சென்றுவிட்டனர். இதனால் அந்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் மின்வாரிய அதிகாரிகள் விழித்தனர்.

பழுதடைந்த டிரான்ஸ்பர்மரை மாற்ற அதிகாரிகள் லஞ்சம் கேட்டனரா? என்று உயர் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News