உள்ளூர் செய்திகள்

கல்லறை தினத்தை முன்னிட்டு பாளை சீவலப்பேரி சாலையில் உள்ள கல்லறை தோட்டத்தில் தங்களது முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்திய கிறிஸ்தவர்கள்.

நெல்லையில் கல்லறை திருநாள் அனுசரிப்பு

Published On 2022-11-02 09:17 GMT   |   Update On 2022-11-02 09:17 GMT
  • நவம்பர் 2-ந் தேதியான இன்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது.
  • கல்லறை அருகே மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

நெல்லை:

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ந்தேதியை கல்லறை திருநாளாக கடைப்பிடிக்கிறார்கள்.

இறந்துபோன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு அன்று மலர் அஞ்சலி செலுத்துவார்கள். இந்த ஆண்டும் நவம்பர் 2-ந் தேதியான இன்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களில் இருக்கும் புல், செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்து சுண்ணாம்பு மற்றும் வர்ணம் பூசி சீரமைத்தனர். பின்னர் தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளில் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி, எரியவிட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

இதனையொட்டி கிறிஸ்தவ மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பாளையில் கல்லறை திருநாள் காலை முதல் அனுசரிக்கப்பட்டது . சீவலப்பேரி கல்லறை தோட்டத்தில் உறவினர்கள் தங்களது முன்னோர்கள் கல்லறையை சுத்தம் செய்து கல்லறை அருகே மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவியும் அவர்களுக்கு பிடித்த உணவு பொருட்கள் உள்ளிட்டவைகளை படைத்தும் அஞ்சலி செலுத்தினர். மேலும் கிறிஸ்தவ ஆலயங்களில் முன்னோர்கள் நினைவாக சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது . ஏழை எளிய மக்களுக்கு உதவிகளும் வழங்கி சென்றனர்.

Tags:    

Similar News