அரசு மருத்துவமனை விரிவாக்கம் குறித்த அனைத்து கட்சி கூட்டம்
- ஊத்தங்கரையில் அனைத்து கட்சி கூட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
- 4.38 ஏக்கர் நிலத்தில் உடனடியாக அரசு மருத்துவமனை அமைக்க பரிந்துரை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அனைத்து கட்சி கூட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே.சந்திரசேகரன் தாங்கினார். அரசுப்பள்ளிகள் வளர்ச்சி அறக்கட்டளை நிர்வாகிகள் லோகநாதன்சேகர், சதீஷ்பாபு, துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஊத்தங்கரை தாலுகா அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு சார்பில் 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
அந்த மருத்துவமனையை அதற்காக ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சந்திரசேகரன் இலவசமாக வழங்கிய மூன்றம்பட்டி ஊராட்சியில் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் 4.38 ஏக்கர் நிலத்தில் உடனடியாக அரசு மருத்துவமனை அமைக்க பரிந்துரை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் அமானுல்லா, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மூன்றம்பட்டி குமரேசன், எக்கூர் செல்வம்,ரஜினி செல்வம், நகர செயலாளர் பாபு சிவக்குமார், அ.தி.மு.க. நகர செயலாளர் சிக்னல் ஆறுமுகம், அவைத் தலைவர் சுப்பிரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் குபேந்திரன்,
ஜெயலட்சுமி, எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு அறக்கட்டளை தலைவர் டாக்டர் இளையராஜா, காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் பூபதி, விஜயகுமார், பா.ம.க.சார்பில் வக்கீல் மூர்த்தி, கிருபாகரன், இ.கம்யூனிஸ்ட் கட்சி சேகர், மா.கம்யூனிஸ்ட் கட்சி மகாலிங்கம்,
பா.ஜ.க.சிவா, சிங்காரவேலன், இந்திய குடியரசு கட்சி மாநில நிர்வாகி கவுன்சிலர் சிவன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி செல்வராஜ், ஜெய்சங்கர், அனைத்து வணிகர் சங்க நிர்வாகி உமாபதி, டாக்டர்கள் கந்தசாமி, நடேசன், வக்கீல்கள் பெருமாள், பாலசந்தர், ஆசிரியர் வீரமணி, ஆடிட்டர் ராஜேந்திரன், பழ.பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.