உள்ளூர் செய்திகள்

நெற்பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் அதிகாரி விளக்கம்

Published On 2022-11-29 08:18 GMT   |   Update On 2022-11-29 08:18 GMT
  • எலிகளின் எண்ணிக்கையை குறைக்க அறுவடைக்கு பின் எலிகளின் வளைகளை கண்டறிந்து வெட்டி அழிக்கலாம்.
  • தேங்காய் மட்டை தண்ணீரில் மூழ்கி களிமண் கரைசலில் விழுந்து இறந்துவிடும்.

நீடாமங்கலம்:

குடவாசல் பகுதியில் சம்பா, தாளடி நெற்பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து குடவாசல் வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொதுவாக எங்கெ ல்லாம் ஆட்டுக்கிடை போடுகிறோமோ அந்த வயல்களில் எலி தொல்லைகள் இருக்காது.

மேலும் நெல் வயல்களில் ஒரு ஏக்கரில் 10 இடங்களில் டி வடிவ குச்சிகளை நட்டால் அதில் இரவு நேரங்களில் ஆந்தைகள் அமர்ந்து வயலில் சேதப்படுத்தும் எலிகளைப் பிடித்து தின்றுவிடும்.

இதேபோன்று காய்ந்த தென்னை மட்டைகளை வயல்களில் தலைகீழாக சொருகி வைத்தாலும், அதில் ஆந்தைகள் அமர்ந்து பூச்சிகள் மற்றும் எலிகளை பிடிக்கும்.எலிகளின் எண்ணிக்கையை குறைக்க அறுவடைக்குப் பின்பு எலிகளின் வளைகளை கண்டறிந்து வெட்டி அழிக்கலாம்.

ஒரு பெரிய வட்ட வடிவில் மண் பானையை வயலில் தரை மட்டத்தில் புதைத்து, அதில் களிமண் கரைசலை பாதிஅளவு நிரப்பி, அதன்மேல் தேங்காய் மட்டையில் நெல் பொரிகளை தேங்காய் எண்ணெய் கலந்து வைத்தால் எலிகள் அதனை சாப்பிடும் போது தேங்காய் மட்டை தண்ணீரில் மூழ்கி களிமண் கரைசலில் விழுந்து இறந்துவிடும்.

அல்லது வேர்கடலை பொடி, வறுத்த எள்ளு பொடி, வெல்லம், நெய் இவற்றுடன் சிமெண்ட் ½ கிலோ கலந்து கொதிக்க வைத்து, பிசுபிசுப்பான தன்மையுடன் இருக்கும் போது உருண்டையாக உருட்டி வரப்புகள் மற்றும் எலி வளைகள் அருகே வைத்தால் வாசனையாக உள்ள உருண்டையை சாப்பிட்டு அதில் உள்ள சிமெண்டு இறுகும் போது எலிகள் தானாக இறந்து விடும்.

இதேபோன்று கருவாட்டு பொடியுடன் சம அளவு சிமெண்டு கலந்து உருண்டையாக உருட்டி எலி நடமாட்டம் உள்ள இடங்களில் வைத்தாலும் அதனை சாப்பிட்டு எலி இறந்து விடும்.

மேற்கண்ட வழிமுறைகளை விவசாயிகள் கையாண்டால், நெற் பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை அழித்து அதிக மகசூல் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News