ஓசூரில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்
- எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது.
- எம்ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
ஓசூர்,
கடந்த ஜூலை மாதம் 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் மற்றும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லும் என்று உச்சநீதி மன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
இதனை வரவேற்று, ஓசூரில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர்.
ஓசூரில் பழைய கிருஷ்ணகிரி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையருகே, மேற்கு மாவட்ட மற்றும் மாநகர அ.தி.மு.க. சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் எஸ்.நாராயணன் ஆகியோர் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், ஓசூர் தெற்கு பகுதி செயலாளர் பி.ஆர் வாசுதேவன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின்போது நிர்வாகிகள் எம்ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். தொடர்ந்து, ஓசூர் பாகலூர் ஹட்கோ பகுதியில் உள்ள மேற்கு மாவட்ட கட்சி அலுவலகம் முன்பும் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் இதில், கூட்டுறவு வீட்டு வசதி தலைவர் நடராஜன், மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.