இடைநின்ற 165 குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை
- அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிவதற்கான மீளாய்வுக் கூட்டம் கடத்தூர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
- இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து உடனடியாக பள்ளியில் சேர்க்க தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிவதற்கான மீளாய்வுக் கூட்டம் கடத்தூர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் மு.முருகன் தலைமை தாங்கினார்.
மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் ரவிக்குமார் பேசியதாவது:-
கடத்தூர் ஒன்றியத்தில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் 165 பேர் உள்ளதாக கணக்கெடுப்பில் அறியப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி அளவில் 7 மாணவர்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள மாணவர்கள் நத்தமேடு, சில்லாரஅள்ளி, குருபர அள்ளி, உனிசின அள்ளி, சிந்தல்பாடி போன்ற கிராமங்களில் உள்ளனர். மாணவர்களை கண்டறிந்து உடனடியாக பள்ளியில் சேர்க்க தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன், மேற்பார்வையாளர்கள் விஜய குமார், ஆனந்தராஜ், சம்பத் பர்குணன் மற்றும் மாவட்ட ஒருங் கிணைப்பாளர் மாது, கடத்தூர் ஒன்றிய தொடக்க மற்றும் நடு நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, கடத்தூர் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் வடமாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வந்த பகுதிகளில் பள்ளி செல்லாத 4 குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களை பள்ளியில் சேர்க்க பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.