திண்டிவனத்தில் அதிரடி வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர் கைது
- கொள்ளையர்களிடமிருந்து 20 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
- பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் இந்த 2 பேர் மீது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம்:
திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டை பகுதிகளில் ரோசனை இன்ஸ்பெக்டர் பிருந்தா, வெளிமேடு பேட்டை எஸ் ஐ செந்தில் குமார், தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்யும்போது போலீசாரை கண்டதும் அவர்கள் 2 பேரும் தப்பி ஓட முயன்றனர்.உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். அப்போது அவர்களின் பாக்கெட்டில் இருந்து தங்க நகை கீழே விழுந்தது.பின்னர் போலீசார் அவர்கள் வந்த வாகனத்தையும் சோதனை செய்தனர். அந்த சோதனையில் திருட்டு வாகனம் என தெரியவந்தது.
மேலும் இவர்களை வெளிமேடு பேட்டை காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர். அதில் இவர்கள் இருவரும் உத்திரமேரூர் அருகே உள்ள குருமாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (வயது 26) லோகநாதன் (20) என்பது தெரிய வந்தது.
மேலும் தீவிர விசாரணையில் இவர்கள் திண்டிவனம் மற்றும் திண்டிவனம் சுற்றியுள்ள பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் காலையில் வீட்டின் முன் கோலம் போடும் பெண்களையும் குறி வைத்து நகை பணம் உள்ளிட்ட வழிபறிகளில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 20 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் இந்த 2 பேர் மீது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.