உள்ளூர் செய்திகள்

அச்சுவெல்லம் ஏலத்தை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அச்சுவெல்லம் ஏலம்

Published On 2022-12-31 09:56 GMT   |   Update On 2022-12-31 09:56 GMT
  • தஞ்சாவூர் மாவட்டத்திலேயே அச்சுவெல்லத்தை விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • 30 கிலோ கொண்ட 1 சிப்பத்திற்கு அதிகபட்சமாக ரூ. 1200-க்கு ஏலம் போனது.

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் அச்சு வெல்லத்தை திண்டுக்கல் மாவட்டம், நெய்காரப்பட்டி, ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள வெல்ல மண்டிகளில் தனியார் வியாபாரிகளிடம், விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர்.

ஆனால் அதற்கான உரிய விலை கிடைப்பதில்லை எனவும், தமிழக அரசே அச்சு வெல்லத்தை கொள்முதல் செய்ய வேண்டும், அதனை, தஞ்சாவூர் மாவட்டத்திலேயே அச்சுவெல்லத்தை விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதன் தொடர்ச்சியாக, தமிழகத்திலேயே முதன் முறையாகத் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமையில் ஏலம் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தொடக்க நிகழ்வு அங்கு நடைபெற்றது. ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமை வகித்து ஏலத்தைத் தொடங்கி வைத்தார். வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர்வித்யா, தஞ்சாவூர் விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ் பாபு, ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர்கள் தாட்சியாயினி, முருகானந்தம், விளம்பர மற்றும் பிரசார கண்காணிப்பாளர் சித்தார்த்தன், பாபநாசம் உழவர் சந்தை வேளாண்மை உதவி அலுவலர் பாலமுருகன், கும்பகோணம் வேளாண்மை அலுவலர் தாரா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஏலத்தில் பாபநாசம், அய்யம்பேட்டை, இலுப்பக்கோரை, கணபதி அக்ரகாரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதியிலிருந்து 21 விவசாயிகள், 2130 கிலோ வெல்லத்தை கொண்டு வந்தனர். இதில் திருச்சி, பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியிலிருந்து 10 வியாபாரிகள் கலந்து கொண்டனர். 30 கிலோ கொண்ட 1 சிப்பத்திற்கு அதிகபட்சமாக ரூ. 1200-ம், குறைந்த பட்சமாக ரூ. 950-ம், சராசரியாக ரூ, 1100 என விலை ஏலம் தொகையாகக் கேட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏலத்திற்கான தொகை வழங்கப்பட்டது.

Tags:    

Similar News