கைப்பந்து போட்டியில் சாதனை புரிந்த ஓசூர் அரசு பள்ளி மாணவிகளுக்கு மேயர் சத்யா பாராட்டு
- விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
- 14 வயதிற்குட்பட்ட பிரிவிலும், 17வயதிற்குட்பட்ட பிரிவிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி வருவாய் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையே யான கைப்பந்து போட்டிகள் கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் 9 மண்டலங்கள் கலந்து கொண்டன. இதில் ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 14 வயதிற்குட்பட்ட பிரிவிலும், 17வயதிற்குட்பட்ட பிரிவிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை, ஓசூர் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா பாராட்டி வாழ்த்தினார். மேலும், இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
ஓசூர் மாநகர தி.மு.க.அவைத் தலைவர் செந்தில் குமார் மற்றும் பயிற்சி யாளர்கள் தாயுமானவன், மாணிக்கவாசகம் ஆகியோர் உடன் இருந்தனர்.