மீஞ்சூர் பகுதியில் ஆவடி போலீஸ் கமிஷனர் ஆய்வு- முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்த உத்தரவு
- குற்ற சம்பவங்கள் நடக்கும் முக்கியமான வீதி பகுதி மற்றும் தெருக்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும்.
- காவலர்களை கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பொன்னேரி:
ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர். இவர் மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மீஞ்சூர் பஜார் வீதி, அத்திப்பட்டு, அத்திப்பட்டு புது நகர் பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தார். மேலும் அங்குள்ள புறக்காவல் நிலையத்தை பார்வையிட்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அதிக குற்ற சம்பவங்கள் நடக்கும் இடங்களை கமிஷனர் சங்கர் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குற்ற சம்பவங்கள் நடக்கும் முக்கியமான வீதி பகுதி மற்றும் தெருக்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். பழுதான கேமராக்களை அகற்றி புதிய கேமராக்கள் பொருத்த வேண்டும். போக்கு வரத்திற்கு இடையூறாக சாலையில் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும். காவலர்களை கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கவும் காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழவேற்காடு மீஞ்சூர் நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் மாடுகள் காணப்படுவதால் அதிகமாக விபத்துக்கள் உயிரிழப்புகள் ஏற்படுவதால் முதலாவதாக மாட்டின் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு பின்னர் அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், உதவி கமிஷனர் ராஜராபர்ட், போக்குவரத்து துணை கமிஷனர் ஜெயலட்சுமி, உதவி ஆணையர் மலைச்சாமி, இன்ஸ்பெக்டர் சோபிதாஸ்,மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் முத்துக்குமார் உடன் இருந்தனர்.