ஆடி பவுர்ணமி சிறப்பு வழிபாடு.. சிறுவாபுரி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்
- மூலவர் முத்தங்கி அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
- பக்தர்கள் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்டநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ஆறு வாரங்கள் தொடர்ச்சியாக வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலுக்கு சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடியற் காலை முதலே நீண்ட வரிசையில் இருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
அவ்வகையில் இன்று ஆடி மாத பௌர்ணமி மற்றும் செவ்வாய்க்கிழமை என்பதால் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மூலவருக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மூலவர் முத்தங்கி அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்காக இன்று காலை முதலே பொது தரிசனம், ரூ.50, ரூ.100 கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோவிலுக்கு வெளியேயும், காத்திருப்பு மண்டபம் உள்ளிட்ட இடங்களில் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் சுமார் 1 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட வசதிகளை கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.