உள்ளூர் செய்திகள்

மொபட்டில் சேலத்தில் இருந்து கோவை வந்த இளம்பெண்

Published On 2022-10-25 09:57 GMT   |   Update On 2022-10-25 09:57 GMT
  • போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.
  • என்ஜினீயரிங் படித்து முடித்து வீட்டில் இருந்து வந்தார்.

கோவை:

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த 26 வயது இளம்பெண். இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து முடித்து வீட்டில் இருந்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் வீட்டில் யாரிடம், எதுவும் சொல்லாமல் சேலத்தில் இருந்து தனது மொபட்டில் தனியாக கோவை கே.ஜி.சாவடிக்கு வந்தார். அப்போது மொபட்டில் பெட்ரோல் இல்லாமல் நின்று போனது.

இதனையடுத்து அந்த இளம்பெண் அந்தப் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றார். அங்கு ரூ.450, பெட்ரோல் போட்டுவிட்டு கையில் பணம் இல்லை என அவர்களிடம் தெரிவித்தார். இது குறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் கே.ஜி சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் முருகசாமி விரைந்து சென்று அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண் வீட்டை விட்டு ஓடி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முருகசாமி இளம் பெண்ணின் பெற்றோரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை கூறினார்.

அப்போது அவர்கள் தங்களது மகளை காணவில்லை என புகார் கொடுக்க கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் இருப்பதாக தெரிவித்தனர்.பின்னர் அவர்கள் போலீசாரிடம் தங்களது மகளை அங்கே பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் நாங்கள் கோவை வந்து அழைத்து செல்கிறோம் என கூறினர்.

பின்னர் இளம் பெண்ணின் பெற்றோர்கள் வந்ததும் போலீசார் அவருக்கு அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News