பொம்மிடி அருகே ஆனைமடுவில் குவிந்துள்ள பொதுமக்கள்.
பொம்மிடி அருகே சுற்றுலாத்தலமாக உருவாகிறது: பசுமை போர்த்திய சோலைவனமாக மாறிய ஆனை மடுவு -ரசிப்பதற்காக ஏராளமாக குவியும் பொதுமக்கள்
- ,கோழி குஞ்சான் மடுவு, யானை மடுவு, புல்லத்தாச்சி கூண்டு என மக்களை கவரும் பல இடங்கள் உள்ளது.
- பொழுது போக்குவதற்காக குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே சேலம்- தருமபுரி மாவட்ட எல்லையில் உள்ளது சேர்வராயன் மலை. கடல் மட்டத்தில் இருந்து 1 ,200 அடிக்கு மேல் உயரம் உள்ள இந்த மேற்கு தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டியான ஏற்காடு உள்ளது.
தருமபுரியில் இருந்து பொம்மிடி வழியாகவும் கோடைவாசஸ்தவமான ஏற்காடு செல்லலாம். அந்த வழிப் பாதை யானைமடுவு வழியாக செல்கின்றது. இந்த பாதையில் 20-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.
இந்த மலை பகுதியில்தான் வேப்பாடி ஆறு உற்பத்தியாகிறது. இந்த ஆற்றில் 10-க்கும் மேற்பட்ட அருவிகளும் உள்ளன.இப்பகுதியில் சுமார் 6 கிலோமீட்டர் நீளத்திற்கு மலைகளின் இரு பகுதிகளுக்கு நடுவில் சாலை ஓர பகுதியில் பள்ளத்தாக்கில் வேப்பாடி ஆறு செல்கின்றது.
மதுர மரம், வேப்பமரம், மாமரம், வேங்கை மரம், அரசமரங்கள் 200 அடி உயரம் ஒங்கி வளந்துள்ளன. பசுமை போர்த்திய சோலைவனத்திற்குள் இந்த ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் மக்களை கவரக்கூடிய இடங்களாக அணைக்கட்டுப்பகுதி ,கோழி குஞ்சான் மடுவு, யானை மடுவு, புல்லத்தாச்சி கூண்டு என மக்களை கவரும் பல இடங்கள் உள்ளது.
இந்தக் காட்டில் சில இடங்களில் பாறைகள் நடுவில் அருவி போலவும் உள்ளது. மக்கள் குளிக்கும் இடங்களும், மிக பிரம்மாண்டமான பல டன் கொண்ட எடை கொண்ட பாறைகளும், குகைப் பகுதி போன்ற அமைப்புகளும் உள்ளது.
இவற்றை ரசிப்பதற்கு குடும்பம், குடும்பமாக மக்கள் வந்து செல்கின்றனர். தருமபுரி, கிருஷ்ணகிரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி,கடத்தூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் மக்கள் பொழுது போக்குவதற்காக குடும்பத்துடன் இருசக்கர வாகனம், சரக்கு வாகனம் மற்றும், சுற்றுலா வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
கடந்த ஓராண்டாக பருவ மழை நன்றாக பெய்துள்ளதால், தொடர்ச்சியாக இந்த பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து மிகவும் அழகாக செல்கிறது. இவற்றை காண்பதற்காகவும் பொதுமக்கள் சுற்றுலா போல வந்து செல்கின்றனர்.