உள்ளூர் செய்திகள்

கொலையான இளையராஜா.

புளியங்குடியில் இடப்பிரச்சினையில் வாலிபர் அடித்துக்கொலை

Published On 2023-08-11 09:17 GMT   |   Update On 2023-08-11 09:17 GMT
  • இளையராஜாவுக்கும், செல்லச்சாமிக்கும் இடம் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.
  • செல்லச்சாமி அருகில் இருந்த மண்வெட்டியால் இளையராஜாவை தலையில் தாக்கியுள்ளார்.

புளியங்குடி:

தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த சிந்தாமணி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மகன் இளையராஜா(வயது 19). இவர் அதே பகுதியில் தனது தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறார்.

இடப்பிரச்சினை

இளையராஜாவுக்கும் அவரது சித்தப்பாவான செல்லச்சாமிக்கும்(35) இடம் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் இளையராஜா வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தார்.

அப்போது செல்லச்சாமிக்கும், இளைய ராஜாவுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது செல்லச்சாமி அருகில் இருந்த மண்வெட்டியால் இளையராஜாவை தலையில் தாக்கியுள்ளார். இதில் இளையராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே செல்லச்சாமி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

போலீசார் விசாரணை

இளையராஜா கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் இளையராஜா உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்த தகவலின் பேரில் புளியங்குடி போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்றனர்.

அவர்கள், இளையராஜா உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். மேலும் தப்பி ஓடிய அவரது சித்தப்பா செல்லச் சாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News