உள்ளூர் செய்திகள்

கோவையில் மகனை மண்எண்ணை ஊற்றி கொல்ல முயன்ற தாய்

Published On 2022-07-22 11:02 GMT   |   Update On 2022-07-22 11:02 GMT
  • குமார் தான் காதலிக்கும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதற்காக பெற்றோரிடம் சம்மதம் கேட்க காத்திருந்தார்.
  • இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் குமாரின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை.

கோவை:

கோவை ஆர்.எஸ்.புரம் காந்திபார்க் சுக்ரவார்பேட்டையை சேர்ந்தவர் குழந்தைவேல். இவரது மனைவி ராணி(வயது52). இவர்களது மகன் குமார்(29). சென்ட்ரிங் தொழிலாளி.

இவர் நீண்டநாட்களாக இளம்பெண் ஒருவரை காதலித்து வருகிறார். இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் குமார் தான் காதலிக்கும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதற்காக பெற்றோரிடம் சம்மதம் கேட்க காத்திருந்தார்.

ஆனால் அதற்குள்ளாகவே தங்களது மகனின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. குமாரின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.குறிப்பாக அவரது தாய் ராணி(52) இந்த காதலை கடுமையாக எதிர்த்ததுடன் அந்த பெண்ணை திருமணம் செய்ய ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம் என கண்டிப்புடன் தெரிவித்தார்.

இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் குமாரின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. இதனால் அவருக்கும், அவரது தாயாருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தாயும், மகனும் பேசிக்கொள்ளவில்லை. இருப்பினும் குமார், தனது காதலியுடன் தொடர்ந்து பேசி வந்தார். இதனையறிந்த ராணி தனது மகன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தார்.

இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வேலைக்கு சென்று திரும்பிய குமார் வீட்டில் உணவருந்தினார். அப்போது மகன் மீது ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த ராணி வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து அவர் மீது ஊற்றி தீ பற்ற வைத்தார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றார். அப்போது குமார் குடிபோதையில் இருந்ததால் தன் மீது பற்றிய தீயை அணைத்து விட்டு வீட்டில் தூங்கி விட்டார்.

மறுநாள் காலையில் போதை தெளிந்ததும் தீக்காயத்தின் வலி தெரிந்தது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் குமாரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் ராணி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காதல் விவகாரத்தில் பெற்ற மகனையே தாய் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News