பல்லடத்தில் போலீசுக்கு பயந்து நீதிமன்றத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி
- காதலருடன் பழனிமலைக்குச் சென்று இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
- காதல் ஜோடியை பல்லடம் போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள அகிலாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த சந்துரு மற்றும் தர்ஷினி இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தர்ஷினியின் பெற்றோர்கள் அவரை வெளியில் விடாமல் வீட்டில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டிலிருந்து தப்பி காதலருடன் பழனிமலைக்குச் சென்று இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தர்ஷினியை காணவில்லை என அவரது பெற்றோர்கள் அவிநாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் தங்களைப் கண்டு பிடித்தால் இருவரையும் பிரித்து விடுவார்கள் என பயந்த காதலர்கள், பல்லடம் நீதிமன்றத்தில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் விசாரணை செய்த நீதிபதி, இருவரும் மேஜர் என்பதாலும், இருவரின் விருப்பப்படியே பதிவு திருமணம் நடந்துள்ளதாலும், அந்தப் பதிவுத் திருமணம் செல்லும் என நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து காதல் ஜோடியை பல்லடம் போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.