உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி பகுதியில் பறவைகளின் உள்ளூர் வலசை தொடங்கியது- சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

Published On 2022-07-04 10:04 GMT   |   Update On 2022-07-04 10:05 GMT
  • கோத்தகிரி பகுதி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பறவைகளின் முக்கிய வலசை பாதையாக உள்ளது.
  • இதமான காலநிலை என்பதால் இனப்பெருக்கத்துக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளுக்கு வர தொடங்கி உள்ளன.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த உயிர்ச்சூழல் மண்டலமாக உள்ளது. மேலும் மாவட்டத்தின் 62 சதவீதப்பகுதி வனப்பகுதியாக அமைந்துள்ளது. இங்கு கோத்தகிரி பகுதி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பறவைகளின் முக்கிய வலசை பாதையாக உள்ளது.

கோத்தகிரியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான கோடநாடு காட்சி முனை, கேத்தரின் நீர்வீழ்ச்சி, உயிலட்டி நீர்வீழ்ச்சி, லாங்வுட் சோலை ஆகிய பகுதிகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் ஆண்டுதோறும் வலசைப்பயணமாக வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.

தற்போது சீசன் காரணமாக இந்த பகுதியில் மரங்கள் உள்பட தாவர இனங்களில் பழங்கள் அதிகமாக காணப்படுவதால் பறவைகளுக்கு ஏற்ற உணவு கிடைக்கிறது. மேலும் இதமான காலநிலை என்பதால் இனப்பெருக்கத்துக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளுக்கு வர தொடங்கி உள்ளன.

கோத்தகிரியில் பறவைகளின் உள்ளூர் வலசை தொடங்கி உள்ளதால் சமவெளி பகுதியில் இருந்து கோடநாடு காட்சி முனை, கேத்தரின் நீர்வீழ்ச்சி மற்றும் லாங்வுட் சோலை உள்ளிட்ட பகுதிகளில் அரிய வகை பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.

இந்த பறவைகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்து அவற்றை புகைப்படம் எடுத்து செல்கின்றனர். இதுகுறித்து பறவைகளை ஆவணப்படுத்தி வரும் ஊட்டியை சேர்ந்த புகைப்படக் கலைஞர் மதிமாறன் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வருவது வழக்கம். இந்த ஆண்டு தொடர் மழை மற்றும் வனப்பகுதியில் பறவைகளுக்கு ஏற்ற பழ வகைகள் அதிகமாக உள்ளது.

இந்த பழ வகைகளை உண்ணவும், இனப்பெருக்கத்திற்காகவும் தற்போது சமவெளி பகுதியில் இருந்து பறவைகள் உள்ளூர் வலசையை தொடங்கியுள்ளது.

இதில் நீலகிரி பிளைகேச்சர், மலபார் விசிலிங் திரஸ், நீலகிரி லாப்பிங் திரஸ், ஒயிட் சீக் பார்பிட், ஒயிட் ஜ, ஆரஞ்சு ஏல்லோ பிளைக்கேச்சர் உள்பட நூற்றுக்கணக்கான அரிய வகை பறவையினங்கள் கோத்தகிரி பகுதியில் தற்போது அதிகமாக காணப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News