டப்பாவில் தலை சிக்கி தவித்த நல்ல பாம்பு உயிருடன் மீட்பு
- 3 நாட்களாக பாம்பு அதே இடத்தில் உயிருடன் இருந்தது.
- ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் நல்ல பாம்பை கொண்டு விட்டார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அளக்குடி தோணித்துறை பகுதியை சேர்ந்தவர் இந்துமதி.
இவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் நல்லபாம்பு வேலி ஓரம் கிடந்தது.
பாம்பு சென்று விடும் என இருந்த இந்துமதி குடும்பத்தினர் மூன்று நாட்களாக பாம்பு அதே இடத்தில் உயிருடன் இருப்பதை கண்டு அருகே சென்று பார்த்தனர்.
அப்போது நல்ல பாம்பின் தலையில் சிறிய பெயிண்ட்டப்பா மாட்டிக்கொண்டதும்,
இதனால் இந்தப் பாம்பு அந்த இடத்தினை விட்டு செல்ல முடியாமல் அங்கேயே சுழன்று கொண்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து சீர்காழியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் இளைஞர் புளிச்சக்காடு தினேஷ் என்பவருக்கு இந்துமதி குடும்பத்தினர் தகவல் அளித்தனர்.
இதனை அடுத்து அங்கு விரைந்து சென்ற தினேஷ் பெயிண்ட்டப்பாவில் தலை சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாம்பினை லாவகமாக பிடித்து, சுமார் அரை மணி நேரம் போராடி பாம்பு தலையில் இருந்த டப்பாவினை லாவகமாக காயம் ஏற்படாதவாறு அறுத்து அகற்றினார்.
பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் நல்ல பாம்பினை கொண்டு விட்டார்.
இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.