செம்போடையில், இலவச பயிற்சி- விழிப்புணர்வு கருத்தரங்கம்
- வங்கிகடன், அரசு துறை சான்றிதழ்கள் பெறுவது எப்படி.
- அடிப்படை பிரச்சினைகளுக்கு புகார் அளிப்பது எப்படி.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த செம்போடையில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் இலவச பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சட்ட பஞ்சாயத்து இயக்க மாநில பொதுச்செயலாளர் அருள் முருகானந்தம் தலைமை தாங்கினார்.
இதில் நீதிமன்ற வழக்குகள் மற்றும் நடைமுறைகளை எதிர்கொள்ளுவது எப்படி? தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் இலவசமாகவும், விரைவாகவும் பட்டா, குடும்ப அட்டை, மின் இணைப்பு, வங்கிகடன், அரசு துறை சான்றிதழ்கள் பெறுவது எப்படி? அடிப்படை பிரச்சினை களுக்கு புகார் அளிப்பது எப்படி? சமூக வலைதளங்களை பயன்படுத்தி புகார் அளிப்பது எப்படி? போன்றவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் கங்காதுரை, நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், தலைஞாயிறு ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியன், கீழையூர் ஒன்றிய பொறுப்பாளர் அன்பழகன், வேதாரண்யம் பேரூராட்சி பொறுப்பாளர் நந்தகுமார் மற்றும் அகிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.