உள்ளூர் செய்திகள்

கபிலர்மலை அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது

Published On 2023-02-08 07:44 GMT   |   Update On 2023-02-08 07:44 GMT
  • தங்கவேல். இவரது மனைவி சசிகலா ( 40). இருவரும் குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.
  • நேற்று பகல் சுமார் 12 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென குடிசை வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கரைப்பாளையம் பகுதி சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி சசிகலா ( 40). இருவரும் குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று பகல் சுமார் 12 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென குடிசை வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அப்போது அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் குடிசை வீட்டில் எரிந்து கொண்டிருந்த தீ மளமள–வென பரவி தீ வேகமாக எரிந்து கொண்டிருந்தது.

அதனால் தீயை அணைக்க முடியவில்லை .இது குறித்து சசிகலா வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று தீயை அணைத்து கட்டுப்படுத்தி அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

இருப்பினும் ரூ 3 லட்சம் மதிப்பிலான குடிசை வீட்டுக்குள் இருந்த துணி,மணிகள், உணவுப் பொருட்கள், பாத்திரங்கள், மளிகை சாமான்கள், ஆவணங்கள் என அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாயின.

Tags:    

Similar News