உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட கெட்டுப்போன இறைச்சி பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த காட்சி.

வேப்பேரியில் 800 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

Published On 2023-03-29 03:58 GMT   |   Update On 2023-03-29 03:58 GMT
  • ஒரு வாகனத்தில் துர்நாற்றம் வீசுவதாகவும், அதில் இறைச்சி வைக்கப்பட்டு இருப்பதாகவும் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.
  • பறிமுதல் செய்யப்பட்ட 800 கிலோ இறைச்சி கொடுங்கையூர் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டது.

சென்னை:

சென்னையில் சுகாதாரமற்ற மற்றும் உண்ணத் தகுதியற்ற இறைச்சி விற்பனை செய்பவர்கள் மீது தமிழக அரசின் உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வேப்பேரி போலீஸ் நிலையம் அருகே (சிக்னல் அருகே) ஒரு வாகனத்தில் துர்நாற்றம் வீசுவதாகவும், அதில் இறைச்சி வைக்கப்பட்டு இருப்பதாகவும் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் என்.ராஜா உள்ளடங்கிய அதிகாரிகள் குழு சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளும் உடனடியாக அந்த பகுதிக்கு வந்தனர். அங்கு புறப்பட தயாராக இருந்த வாகனத்தை வழிமறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அந்த வாகனத்தில் 800 கிலோ அளவில் கன்றுக்குட்டி இறைச்சி இருப்பதும், அது கெட்டுப்போய் இருந்ததும் சோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து வாகனத்தை ஓட்டிய டிரைவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அந்த டிரைவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், 'பிடிபட்ட இறைச்சி கெட்டுப் போய் சுகாதாரமற்ற முறையில் இருந்தது. இந்த இறைச்சி நகரின் எந்தெந்த பகுதிகளில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட இருந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். பறிமுதல் செய்யப்பட்ட 800 கிலோ இறைச்சி கொடுங்கையூர் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் தெரியவரும் பட்சத்தில் 9444042322 என்ற எண்ணில் உணவு பாதுகாப்பு துறைக்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம்' என்றனர்.

கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் வேப்பேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News