திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 61 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
- 55 திருமணங்கள் முடிந்த நிலையில் சட்ட ரீதியான மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- விவரம் தெரியவந்தால் ‘காதல் திருமணம்’ என்று கூறி பெற்றோர்களும் தப்பி விடுகின்றனர்.
திருப்பூரில் :
திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் குழந்தை திருமணம் நடப்பது தடுக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் திருப்பூரில் 61 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 55 திருமணங்கள் முடிந்த நிலையில் சட்ட ரீதியான மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடத்த நினைக்கின்றனர். 18 வயது பூர்த்தியாகாத பெண்ணுக்கு திருமணம் நடந்தால் குறிப்பாக மணமகனுக்குதான் பாதிப்பு அதிகம் என்பதை உணர வேண்டும். மணமகள் வயது 18-க்கு குறைவாக இருந்து, அந்த விவரம் தெரியவந்தால் 'காதல் திருமணம்' என்று கூறி பெற்றோர்களும் தப்பி விடுகின்றனர். எனவே திருமண வயது இளைஞர்கள் மற்றும் பெண்ணுக்கு பூர்த்தியாகிவிட்டதா என்பதை உறுதி செய்த பிறகே திருமண ஏற்பாடுகளை தொடங்க வேண்டும்' என்றனர்.