கொடைக்கானலில் கஞ்சா, போதை காளான்கள் விற்ற 6 பேர் கைது
- கொடைக்கானல் நகரப்பகுதிகள் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் தொடர்ந்து கஞ்சா மற்றும் போதை கலந்து காளான் விற்பனை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
- போதை காளான் விற்ற 6 பேரை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் நகரப்பகுதிகள் மட்டுமின்றி கிராமப்பகுதிகளிலும் தொடர்ந்து கஞ்சா மற்றும் போதை கலந்து காளான் விற்பனை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத்தொடர்ந்து காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் விற்பனை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கொடைக்கானல் போலீசார் மேல்மலை மற்றும் கீழ் மலைப்பகுதிகளில் தொடர்ந்து போதை ஒழிப்பு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனடிப்படையில் மேல் மலைப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மன்னவனூர் கைகாட்டி பகுதியில் நின்றுகொண்டிருந்த சிலரை விசாரித்தனர்.
அப்போது மன்னவனூர் கிராமத்தை சேர்ந்த வைரவேல், லட்சுமணன், மதன்குமார் மற்றும் பூண்டி கிராமத்தை சேர்ந்த சத்தியராஜ், கவுஞ்சி கிராமத்தை சேர்ந்த குணசேகரன், மேலும் கேரளா மாநிலத்தை சேர்ந்த சரத்குமார் ஆகியோர் கஞ்சா மற்றும் போதை காளான் சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் போதை கலந்த காளான் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.