களக்காடு அருகே மண் திருடிய 5 பேர் கைது- 2 ஜே.சி.பி., டிராக்டர்கள் பறிமுதல்
- குளத்தில் சிலர் ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் மண் அள்ளிக் கொண்டிருந்தனர்.
- தப்பி ஓடியவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
களக்காடு:
களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் கோவிலம்மாள்புரம் வடமநேரி குளத்தில் ரோந்து சென்றனர்.
அப்போது குளத்தில் சிலர் ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் மண் அள்ளிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர். இதைப்பார்த்த போலீசார் தப்பி ஓடியவர்களை மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் சிதம்பர புரத்தை சேர்ந்த பாலையா மகன் செல்வ குமார் (வயது 20), வீராங்குளத்தை சேர்ந்த சண்முக வேல் மகன் ஸ்ரீரெங்கமூர்த்தி (26), சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த விவேகநாதன் மகன் பாலதுளசிமணி (34), செங்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணன் மகன் மாரிசெல்வம் (50), நடுச்சாலைப்புதூரை சேர்ந்த கணேசன் மகன் அஜிஸ் (26) என்பதும், அவர்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் மண் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார் 2 ஜே.சி.பி எந்திரங்களையும், 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர்.