உள்ளூர் செய்திகள்

காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஒரே நாளில் ரூ.4.5 லட்சம் உண்டியல் வசூல்

Published On 2023-03-08 09:44 GMT   |   Update On 2023-03-08 09:44 GMT
  • இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசிமகத்தன்று தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
  • பக்தர்கள் கலந்து கொண்டு அரங்கனை தரிசனம் செய்து அருளாசி பெற்றுச்சென்றனர்.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாத சுவாமி கோவில் இருந்து வருகிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசிமகத்தன்று தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக கட்டுப்பாடுகளுடன் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நடப்பாண்டின் தேர்த்திருவிழாவானது கடந்த பிப்ரவரி 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனைத்தொடர்ந்து எம்பெருமான் தினந்தோறும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார். இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டமானது வெகு விமரிசையாக நடந்தது. தேரோட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு,நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரங்கனை தரிசனம் செய்து அருளாசி பெற்றுச்சென்றனர்.

அதனை தொடர்ந்து நேற்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பக்தர்கள் தண்ணீர் சேவை,பந்த சேவை எடுத்து வந்து திருக்கோவிலின் 4 ரத வீதிகளின் வழியாக ஊர்வலமாகச்சென்று இறுதியில் காரமடை அரங்கநாதர் கோவிலில் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். மேலும் சில பக்தர்கள் அருள் வந்து ஆட்டம் ஆடிய படியே சவுக்கால் அடித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தேரோட்ட நிகழ்வின் போது அன்று காலை முதல் நேற்று காலை வரை ஒரு நாளில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணியானது கோவில் செயல் அலுவலர் லோகநாதன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதில் கோவில் அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உண்டியலில் பக்தர்கள் ரொக்கமாக ரூ.4,52,798 பணத்தினை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இதனால் கோவிலுக்கு சுமார் ரூ.4.5 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

Tags:    

Similar News