உள்ளூர் செய்திகள்

புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையொட்டி தருமபுரி உழவர் சந்தையில் 42 டன் காய்கறிகள் விற்பனை

Published On 2023-10-14 15:12 IST   |   Update On 2023-10-14 15:12:00 IST
  • தருமபுரி உழவர் சந்தையில் 42 டன் காய்கறிகள், பழங்கள் விற்பனையானது.
  • 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாங்கி சென்றனர்.

புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையையொட்டி தருமபுரி உழவர் சந்தையில் 42 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையானது.

புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமை நாட்களிலும் பெரும்பாலான வீடுகளில் பொதுமக்கள் விரதம் இருந்து சாமிக்கு படையல் இட்டு வழிபடுவார்கள். பின்னர் பல்வேறு காய்கறிகளுடன் செய்யப்பட்ட உணவை குடும்பத்துடன் அருந்தி விரதத்தை முடித்துக் கொள்வார்கள். இதனால் புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமை நாட்களிலும் காய்கறிகள் விற்பனை படுஜோராக நடைபெறுவது வழக்கம். தருமபுரி உழவர் சந்தையில் நேற்று புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு காய்கறிகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

அதிகாலை முதலே ஏராளமான விவசாயிகளும் பொதுமக்களும் உழவு சந்தைக்கு வரத் தொடங்கினர். நேற்று ஒரே நாளில் மட்டும் இங்கிலீஷ் காய்கறிகள் (அக்ரோ காய்கறிகள்) மற்றும் நாட்டு காய்கறிகள் என மொத்தம் 39 டன் காய்கறிகளும், 3 டன் பழங்களும் விற்பனையானது இதன் மொத்த மதிப்பு ரூ.12 லட்சத்து 76 ஆயிரம் ஆகும்.

தருமபுரி உழவர் சந்தைக்கு நேற்று 142 விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். மொத்தம் 59 வகையான காய்கறிகள் விற்பனைக்கு வந்தது. சுமார் 9000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காய்கறிகள் வாங்க உழவர் சந்தைக்கு வந்தனர். வழக்கமாக தருமபுரி உழவர் சந்தைக்கு ஒரு நாளைக்கு 20 முதல் 25 டன் காய்கறிகள் விற்பனைக்கு வருவது வழக்கம். புரட்டாசி 4-வது சனிக்கிழமை என்பதால் கூடுதலாக காய்கறிகள் விற்பனைக்கு வந்தது என்று உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோவன், உதவி வேளாண்மை அலுவலர்கள் முனியப்பன், மூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.

தருமபுரி உழவர் சந்தை அமைந்துள்ள கிருஷ்ணகிரி சாலையில் நேற்று அதிகாலை முதலே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Similar News