திண்டுக்கல்லில் சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 40 ஆண்டு சிறை உடந்தையாக இருந்த பெண்ணுக்கு 10 ஆண்டு தண்டனை
- கடந்த 2016-ம் ஆண்டு சாமியார் தோட்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை திருமணத்திற்காக வாலிபர் கடத்திச்சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
- வாலிபருக்கு 40 ஆண்டு சிறையும், உடந்தையாக இருந்த பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கியமாதா தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் வினோத்(32). சாமியார்தோட்டம் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் மனைவி கவிதா(37). இவர்கள் 2 பேரும் ஒரே இடத்தில் கட்டிட பணி செய்து வந்தனர்.
இதனால் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு சாமியார் தோட்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை திருமணத்திற்காக வினோத் கடத்திச்சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதற்கு கவிதாவும் உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் வினோத் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இதேபோல் கவிதாவும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனை விசாரித்த மாவட்ட மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி சரண் தீர்ப்பு வழங்கினார்.
வினோத் மீதான குற்றங்கள் உறுதியானதால் அவருக்கு 40 ஆண்டு சிறை மற்றும் ரூ.20ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அவருக்கு உடந்தையாக இருந்த கவிதாவுக்கு 10 ஆண்டு சிறைதண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அபராத தொகையான ரூ.50 ஆயிரத்தை இழப்பீடாக வழங்கவேண்டும் என்றும் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.