உள்ளூர் செய்திகள்

ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்த பெண்ணின் 4 வயது மகள் பாம்பு கடித்து உயிரிழப்பு

Published On 2023-06-09 06:15 GMT   |   Update On 2023-06-09 06:15 GMT
  • நாகலட்சுமி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமங்கலம் அருகே ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • மனைவி தற்கொலை செய்துகொண்டதையடுத்து கணேசன் தனது 5 மகள்களையும் பராமரித்து வளர்த்து வந்தார்.

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நாகலட்சுமி (வயது35). இவர்களுக்கு சங்கீதா, விஜயதர்ஷினி, தேன்மொழி, சண்முகப்பிரியா, ஷிவானி என 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.

100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வந்த நாகலட்சுமி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமங்கலம் அருகே ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஊராட்சி செயலாளருக்கும், இவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் நாகலட்சுமி இந்த விபரீத முடிவை எடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

மனைவி தற்கொலை செய்துகொண்டதையடுத்து கணேசன் தனது 5 மகள்களையும் பராமரித்து வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று அவர் தோட்ட வேலைக்கு சென்று விட்டார். 2-வது மகள் விஜயதர்ஷினி (வயது9), 4-வது மகள் சண்முகப்பிரியா(4) ஆகிய 2 பேர் வீட்டில் இருந்தனர்.

அவர்கள் வீட்டின் பின்புறம் உள்ள தொட்டியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த விஷப்பாம்பு 2 பேரையும் கடித்தது. சிறிது நேரத்தில் அவர்கள் மயங்கி விழுந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விஜயதர்ஷினி மற்றும் சண்முகப்பிரியாவை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இருவருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி சிறுமி சண்முகப்பிரியா பரிதாபமாக இறந்தார். மற்றொரு சிறுமி விஜயதர்ஷினிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய் தற்கொலை செய்து கொண்ட சில மாதங்களில் மகள் பாம்பு கடித்து இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News