குற்றசம்பவங்களில் ஈடுபட்ட 39 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு
- தீவிர வாகன சோதனையால், 51 ஆயிரத்து, 157 கிலோ புகையிலை பொருட்கள் பிடிபட்டுள்ளன.
- குற்ற வழக்கில் தொடர்புடைய, 35 பேர் மற்றும் கடத்தல் வழக்குகளில், 4 பேர் உட்பட, 39 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீசாரின் துரித நடவடிக்கைகளால் கடந்தாண்டில் (2022) கொலை, கொள்ளை சம்பவங்கள் குறைந்துள்ளன. கடந்த, 2021-ம் ஆண்டு 66 கொலை வழக்குகள் பதிவான நிலையில், கடந்தாண்டு, 50 கொலை வழக்குகளாக குறைந்துள்ளன. இது, 28 சதவீதம் குறைவாகும். பதிவான, 50 வழக்குகளில், 49-ல், குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதே போல திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் பதிவான வழக்குகளில், 77 சதவீத சம்பவங்களில் குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். திருடு போன சொத்துக்களும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கடந்த, 2021-ல், கர்நாடகத்தில் இருந்து கடத்தப்பட்ட, 26 ஆயிரத்து, 574 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடந்த ஆண்டு போலீசார் மேற்கொண்ட தீவிர வாகன சோதனையால், 51 ஆயிரத்து, 157 கிலோ புகையிலை பொருட்கள் பிடிபட்டுள்ளன.
மாவட்டத்தில் கஞ்சா பெரிய அளவில் பிடிபடவில்லை. அஞ்செட்டி, ஒசூர், தளி, உள்ளிட்ட பகுதிகளில் சிறிய அளவில் மட்டுமே சிக்கி உள்ளது. அதன்படி மாவட்டத்தில் உள்ள, 3,000 கிராமங்களில், 2,900 கிராமங்கள் கஞ்சா இல்லாத கிராமங்களாக மாறி உள்ளன.
சந்துகடை, அனுமதி யற்ற பார்கள் மூட ப்பட்டு கள்ளசந்தை மது விற்பனையை தடுக்க நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும். இதனால் பெருமளவில் குற்ற சம்பவங்கள் குறையும்.
அதேபோல மாவட்டத்தில் 'ரெட் சோன்' என பார்க்கப்படும் காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி டவுன், ஓசூர் சிப்காட், ஹட்கோ, சூளகிரி, மத்திகிரி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதுடன், வாகன சோதனைகள், கண்காணிப்பை அதிகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கட்டப்பஞ்சாயத்து வழக்குகளில் உடனடியாக வழக்கு பதிந்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. கடந்தஆண்டில் தொடர் குற்ற வழக்கில் தொடர்புடைய, 35 பேர் மற்றும் கடத்தல் வழக்குகளில், 4 பேர் உட்பட, 39 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.