உள்ளூர் செய்திகள்

வடவள்ளியில் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை-பணம் கொள்ளை

Published On 2022-08-29 09:43 GMT   |   Update On 2022-08-29 09:43 GMT
  • வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
  • 30 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

கோவை:

கோவை வடவள்ளி, சின்மயா நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 45). இவர் காட்டூரில் உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடையில் வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் தனது மனைவியை அழைத்து கொண்டு பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது அவரது வீட்டில் திடீரென ஏதோ சத்தம் கேட்டது. இதனை கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் உடனே பத்மநாபனுக்கு செல் போனில் அழைத்து தகவல் தெரிவித்தார்.பத்மநாபன் தனது தந்தை பாலசுப்ரமணியனுக்கு போன் செய்து வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறினார்.

அவர் பத்மநாபன் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 30 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பாலசுப்ரமணி வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கைரேகை நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை ஆய்வு செய்து சேகரித்தனர்.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News