கொடைக்கானலில் கஞ்சா, போதை காளான் விற்ற 3 பேர் கைது
- போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 நபர்களை அழைத்து விசாரித்ததில் போதைக்காளான் கஞ்சா விற்பனை செய்பவர்கள் என தெரியவந்தது.
- 1.100 கிராம் கஞ்சா, 100 கிராம் போதை காளான் பறிமுதல் செய்யப்பட்டது.அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கொடைக்கானல் போலீசார் சிறையில் அடைத்தனர்.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் படி கொடைக்கானல் டி.எஸ்.பி சீனிவாசன் அறிவுறுத்தலின்படி கொடைக்கானல் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை செய்பவர்களை கைது செய்ய கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணகுமார், ராமராஜ், தலைமைக் காவலர் காசிநாதன், முதல் நிலைக் காவலர் சரவணன் ஆகியோர் கொண்ட தனிப்படையை அமைத்து தேடி வந்தனர்.
கே.ஆர்.ஆர் கலையரங்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 நபர்களை அழைத்து விசாரித்ததில் போதைக்காளான் கஞ்சா விற்பனை செய்பவர்கள் என தெரியவந்தது.
மேலும் அவர்கள் கொடைக்கானல் அப்சர்வேட்டரி வி.ஜி.பி கார்டன் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (32), அப்சர்வேட்டரி செல்லப்புரம் பகுதியை சேர்ந்த ராஜபாண்டி (26), தாமஸ் டவுன் புதிய பெங்களூர் வடக்கு பகுதியைச் சேர்ந்த கிளிப்ட்அகஸ்டின் (27) ஆகியோர் கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து 1.100 கிராம் கஞ்சா, 100 கிராம் போதை காளான் பறிமுதல் செய்யப்பட்டது.அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கொடைக்கானல் போலீசார் சிறையில் அடைத்தனர். இவர்கள் தொடர்புடைய வேறு யாரேனும் உள்ளனரா என்பது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.