நிலக்கிழார் வீட்டில் 25 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வகணேசன் (வயது 55). நிலக்கிலாரான இவர் புதுக்கோட்டை பனையப்பட்டி மற்றும் மதுரையில் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். கடந்த 2019 வரை செல்வ கணேசன் தனது குடும்பத்தினருடன் பனையப்பட்டியில் உள்ள தனது பெருமாள் இல்லத்தில் வசித்தார். பின்னர் மதுரைக்கு குடி பெயர்ந்தனர். அதைத்தொடர்ந்து கடந்த நான்கு வருடமாக பெருமாள் இல்லம் பூட்டப்பட்டு கிடந்தது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு பனையப்பட்டி இல்லத்துக்கு செல்வகணேசன் வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 25 கிலோ வெள்ளி பொருட்களை காணவில்லை. மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை அள்ளிச் சென்று விட்டனர். இதுகுறித்து செல்வகணேசன் பனையப்பட்டி போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சம்பவ இடம் குறைந்து வந்து விசாரணை நடத்தினார். நிலக்கிழார் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.