உள்ளூர் செய்திகள்

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் 2,100 கனஅடி திறப்பு

Published On 2022-11-28 10:12 GMT   |   Update On 2022-11-28 10:12 GMT
  • தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகில் உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்ட்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு கிருஷ்ணா கால்வாய் உள்ளது.
  • கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கால்வாய் சீரமைப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறை வேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம் பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

கிருஷ்ணாநீர் திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடம் தோறும் தமிழகத்திற்கு 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

பூண்டி ஏரியில் மதகு கிணறு அமைக்கும் பணிகள் மற்றும் கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் ஜூலை மாதத்தில் கிருஷ்ணா நதி நீர் பெறவில்லை.

இந்த நிலையில் வடகிழக்கு பருமழை தீவிரமடைந்து திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பூண்டி ஏரிக்கும் தண்ணீர் வரத்து அதிகமானது. ஆந்திராவிலும் பலத்த மழை பெய்ததால் கண்டலேறு அணைக்கும் நீர்வரத்து அதிகரித்தது.

இந்த அணையின் மொத்த கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆகும். இதில் தற்போது 55 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நேற்று கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 2100 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரை குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வினாடிக்கு 424 கன அடி வருகிறது. பூண்டி ஏரிக்கு 400 கன அடி வந்து கொண்டிருக்கிறது.

ஓரிரு நாட்களில் கிருஷ்ணா தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 32 அடியாக பதிவானது. 2.241 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 400 கன அடி வீதம், மழைநீர் வினாடிக்கு 410 கன அடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 38 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகில் உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்ட்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு கிருஷ்ணா கால்வாய் உள்ளது. கடந்த காலங்களில் பெய்த பலத்த மழைக்கு ஊத்துக் கோட்டை அம்பேத்கர் நகர் பகுதியில் இருந்து ஆலப்பாக்கம் வரை 8.3 கிலோமீட்டர் தூரத்துக்கு கால்வாய் சேதமடைந்தது. இதன் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.

6.3 கிலோமீட்டர் தூரத்துக்கு பணிகள் முடிவடைந்தன. பருவமழை தீவிரமடைந்ததையொட்டி பலத்த மழை பெய்ததால் பணிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. தற்போது கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கால்வாய் சீரமைப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News