உள்ளூர் செய்திகள்
கிரில் கம்பிகளுக்கு இடையே குழந்தை ஹரி பிரியன் தலை சிக்கியிருப்பதை படத்தில் காணலாம்

வீட்டு மாடி கிரில் கம்பிகளுக்கு இடையே தலை சிக்கியதால் பரிதவித்த குழந்தை

Published On 2022-06-03 10:58 GMT   |   Update On 2022-06-03 10:58 GMT
தஞ்சை அருகே தாராசுரத்தில் வீட்டு மாடி கிரில் கம்பிகளுக்கு இடையே தலை சிக்கிய குழந்தையை பொதுமக்கள், பெற்றோர் நீண்டநேரம் போராடி மீட்டனர்.
சுவாமிமலை:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம்- தஞ்சை முக்கிய சாலையில் தாராசுரம் அண்ணா சிலை அருகே மாடி வீட்டில் வசிப்பவர்கள் விஜய்ஆனந்த்- கீர்த்திகா.

இவர்களது ஒன்றரை வயது ஆண் குழந்தை ஹரி பிரியன். இன்று காலை மாடியில் உள்ள தாழ்வார பகுதியில் குழந்தை ஹரிபி ரியன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்து இரும்பு கிரிலில், குழந்தையின் தலை பகுதி சிக்கியது.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் அந்த காட்சியை பார்த்து அதிர்ந்தனர். இவர்களின் சத்தத்தை கேட்டு அவ்வழியாக சாலையில் சென்றோர் பலரும் இதனைப் பார்த்து திடுக்கிட்டனர்.அதில் ஒருவர் அவசர அவசரமாக ஆக்சா பிளேடு கொண்டு வந்து கிரில் கம்பி ஒன்றை அறுத்து குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கினார்.

இதற்கிடையே குழந்தையை ஒருவர் பிடித்துக் கொள்ள மற்ற இருவர் கம்பிகளுக்கு இடையே சிக்கிய குழந்தையை மீட்க இரு கம்பிகளையும் வெளிப்புறமாக இழுத்து விலக்கி குழந்தையை பத்திரமாக வெளியே எடுத்தனர். கூடியிருந்த பொதுமக்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பயந்துபோன குழந்தையை தாய் தூக்கி ஆறுதல் படுத்தினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Tags:    

Similar News